எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பொதுவான கொள்கைகளை கொண்ட கட்சிகளுடன், குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அம்மாநில பெர்சாத்து கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து மலாக்கா மாநில பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஹிஷாமுதீன் அப்துல் கரீம் கூறுகையில், கட்சியின் எதிர்காலம் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்காக அனைத்து வாய்ப்புகளையும் திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் நெகிரி செம்பிலான் மற்றும் Johor மாநிலத் தேர்தல் முடிவுகளும் முக்கியமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் பெரிக்காத்தான் கூட்டணியில் உருவான நம்பிக்கையை மீறிய கட்சிகளுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இருக்கக்கூடாது என்றும் ஹிஷாமுதீன் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பெர்சாத்து தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தை அல்லது அரசியல் ஒத்துழைப்பும் கட்சித் தலைவர் மற்றும் மத்திய தலைமையின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை பெர்சாத்து கட்சி ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும்,
கட்சித் தலைமை எந்த கூட்டணி அல்லது ஒத்துழைப்பின் கீழ் போட்டியிட முடிவு செய்தாலும், அதற்கு மலாக்கா பெர்சாத்து தயாராக இருப்பதாகவும் ஹிஷாமுதீன் தெரிவித்துள்ளார்.
மலாக்கா மாநில சட்டமன்றமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் புதிய ஆணையைப் பெறுவதற்காக தேர்தலை சந்திக்க வேண்டும்.
மேலும், கடந்த மலாக்கா தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து கட்சி 28 தொகுதிகளில் பெம்பான் மற்றும் சுங்கை உடாங் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.








