கோலாலம்பூர், நவம்பர்.17-
தங்களுக்கு எதிரான திவால் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரஸாக்கும் அவரது மகன் டத்தோ முகமட் நஸிஃபுடினும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த நடவடிக்கையை நிறுத்தம் செய்வதற்கான எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை என்று கூறி நீதித்துறை ஆணையர் சுஹேந்திரன் சொக்கநாதன் என்ற சஹெரான் அப்துல்லா அம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
அதே வேளையில் வழக்குச் செலவுகளுக்காக அவர்கள் இருவரும் தலா 7,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
நஜிப்பும், அவரது மகனும் தங்களது வரி நிலுவைத் தொகையான 1.69 பில்லியன் ரிங்கிட் மற்றும் 37.6 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தத் தவறியதையடுத்து, உள்நாட்டு வருவாய் வாரியமான IRB -ஆல் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இந்த வரி மதிப்பீடுகள் தவறானவை என்றும், அதன் தொடர்புடைய வழக்குகள் மற்ற நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கக்கூடாது என்று நஜிப் தரப்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.








