இந்துமதத்தின் புனிதச் சின்னமான சூலத்தை அவமதித்த வழக்கில், சமூக செயற்பாட்டாளர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படவிருந்த நிலையில், அவ்வழக்கு வரும் மே 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஹெமி அன்னெரினா ஹாஜா மைதீன் அத்தேதியை நிர்ணயித்தார்.
தமீம் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவ்வழக்கை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வர சுமார் இரண்டு மாதங்கள் அவசியம் என்று மாநில குற்றப்பத்திரிகை இயக்குநர் டத்தோ கைரில் அன்வார் அப்துல் ஹாலிம் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
மேலும், தாய்லாந்து குடிநுழைவு அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தமீம் கடந்த மார்ச் 15-ஆம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத்துக்கு புறப்பட்டதாகக் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், தமீம் தஹ்ரியை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக புதிய தேதியை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், தமீம் மீது இதுவரை 192 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, நேற்று, மலேசிய போலீஸ் படைத் தலைவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமீம் உட்பட நால்வர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 295-ன் கீழ் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
லங்காவியிலுள்ள பழமைவாய்ந்த இந்து ஆலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்த இந்துமதத்தின் புனிதச் சின்னமான சூலத்தை அவமதித்ததாக தமீம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








