ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கியில் உள்ள பான்டாய் பத்து லாயர் கடற்கரையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி, நீரில் மூழ்கிய இருவரின் உயிரைக் காப்பாற்றிய நபரின் வீரத்தை, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பாராட்டியுள்ளது.
36 வயதான முகமட் டானியல் முகமட் சானின், தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்த போது கடற்கரையிலிருந்து உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
முதலில், மற்றொரு குடும்பம் கடற்கரையில் விளையாடுவதாக எண்ணிய முகமட் டானியல், அருகில் சென்ற போது, ஒரு சிறுவனும், இளம் பெண்ணும் கடலின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டுள்ளார்.
உடனடியாகத் தனது பாதுகாப்பை பற்றி சிந்திக்காமல் கடலில் குதித்து, இருவரையும் கரைக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான முகமட் டானியல், திறமையான நீச்சல் வீரராக இல்லாத போதிலும் கூட, உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி, தன்னை உடனடியாக செயல்பட வைத்ததாக கூறினார்.
இந்நிலையில், ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவருக்கு சான்றிதழும், சன்மானமும் வழங்கி கௌரவித்துள்ளது.








