கடந்த ஆண்டு தனது மனைவியும் மகனையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரின் வழக்கு விசாரணை, முழுமையான தடயவியல் அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், வரும் ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
34 வயதான டாக்டர் சியா டோங் ஹாங், கடந்த 2025-ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 9.50 முதல் 10.34 மணி வரை, பண்டார் டத்தோ ஆன் பகுதியில் உள்ள ஜாலான் பெர்ஜிரானன் 11/12 என்ற இடத்தில், தனது மனைவியும் மகனையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தனியார் கிளினிக் மருத்துவரான டாக்டர் சியா, பொந்தியான், உலு சோ தடுப்புக் காவல் மையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, மூன்று தனித்தனி மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டபோது சாந்தமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
நீதிபதிகள் நபிலா நிஜாம், ஏ. ஷார்மிணி மற்றும் அதிஃபா ஹசிமா வஹாப் ஆகியோர், இவ்வழக்கில் தடயவியல் அறிக்கைகள் உட்பட நிலுவையிலுள்ள அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதற்காக வரும் ஏப்ரல் 29-ஆம் தேதியை நிர்ணயித்தனர்.
அதேவேளையில், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் கீழ் வருவதால், இந்த வழக்கை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான தேதியாக வரும் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








