தாம் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற போது சுமார் 50,000 குடியுரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது 4,121 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 15A, 15(2), 19(1), 30(1) ஆகிய பிரிவுகளின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டில் பிறந்த மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகள் தொடர்பான சுமார் 7,000 விண்ணப்பங்களில், தற்போது சில நூறு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சைஃபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாடுகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மலேசியப் பெண்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை வழங்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான சட்டத் திருத்தங்கள், ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் தயாராகியுள்ளதுடன், சட்டத்துறைத் தலைமை அலுவலக சரிபார்ப்பும் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் தேதியை மாமன்னர் நிர்ணயிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விவரித்துள்ளார்.








