ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சுமார் 30 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த வி. ரெஜினா மேரி, தமது ஆலய உறுப்பினர் பதவி அநியாயமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
48 வயதான ரெஜினா, 2023-ஆம் ஆண்டு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், 2025-ஆம் ஆண்டு ஆலய நிர்வாகக் குழுவில் இடம் பெறவும் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், ஜூன் 14-ஆம் தேதி கோயில் அறங்காவலர் ஒருவரைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விளக்கம் கோரிய பின்னர், தமது சமயத் தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் ஸ்தாப்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், வழக்கு தற்போது நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆலய நிர்வாகத்திடம் பலமுறை விளக்கம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தனது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு கிடைத்ததாகவும், திருப்திகரமான விளக்கம் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ரெஜினா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதை ஆலயத் தலைவர் துரைசாமி ராமையா உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலதிக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.








