ஜோகூரைச் சேர்ந்த பெர்சத்துவான் பெஙானுட் அகாமா இந்து சமயம் செகாமட் ஜோகூர் என்ற இந்து அமைப்பு, மானிய விண்ணப்பத்தை முதலில் அங்கீகரித்துவிட்டு பின்னர் நிராகரித்ததாகக் கூறி மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த 2025 -ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, அந்த அமைப்புக்கு மானியம் வழங்க மித்ரா ஒப்புதல் அளித்ததாக அந்த அமைப்பின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான மதன் ஆனந்தராம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சுராட் செதுஜு தெரிமா என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தேவையான ஆவணங்களை மித்ரா கோரியதாகவும், அந்த ஆவணங்களை அமைப்பு சமர்ப்பித்ததுடன் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் தேதி கிடைக்கலாம் என்றும் மதன் ஆனந்தராம் தெரிவித்துள்ளார்.








