சிரம்பானில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கட்டுமான நிலையில் இருந்த வேலி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், 43 வயதான வீ. தியாகராஜன் என்பவரின் வீட்டின் பக்கவாட்டில் கட்டப்பட்டு வந்த வேலி சுவரின் ஒரு பகுதி இடிந்து, கான்கிரீட் கற்கள் சாலையிலும் அண்டை வீட்டாரின் டொயோட்டா வியோஸ், பெரோடுவா விவா மற்றும் புரோட்டோன் பெர்சோனா கார்களிலும் விழுந்தன.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சுவர் கட்டும் பணி தொடங்கிய நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் பணி நிறைவடைய இருந்ததாக தியாகராஜன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் போலீசில் புகார் அளித்துள்ளதுடன், இடிந்த சுவரை மீண்டும் கட்டித் தருவதாகவும் உறுதியளித்தாக தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நில அசைவு மற்றும் கனமழை காரணமாக சுவர் இடிந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் பொறுப்பேற்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








