கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி 11 வாகனங்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஹோண்டா சிஆர்-வி காரை ஓட்டிச் சென்ற 18 வயது செபஸ்டியன் சியோ ஜென், 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது தந்தை சியோ பெங் வாயின் உட்பட 4 பேர் ஏற்கனவே விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தெமர்லோ பகுதியில் இரவு 10.44 மணியளவில் நடந்த இந்த விபத்தில் விரைவுப் பேருந்து, சிமென்ட் டேங்கர் லாரி உள்ளிட்ட 11 வாகனங்கள் மோதிக் கொண்டன. மேலும் பலர் காயமடைந்தனர்.
இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்த சிமென்ட் டேங்கர் லாரி ஓட்டுநர் 52 வயதான ஸுல்கர்னாயின் மாட் நோ மீது, 4 பேரின் உயிரிழப்புக்கு தொடர்புடையதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது நேற்று அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.








