கௌதம புத்த பிரானின் புனித அவதார தினமான விசாகத் தினம் நாளை நாடெங்கும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படவுள்ள வேளையில், மனிதநேயத்தையும் அமைதியையும் ஆன்மீக வழியில் போற்றி வளர்க்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டகாங் மலேசியர்களுக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
"டிஜிட்டல் யுகத்தை எதிர்கொள்வோம், கூட்டு ஞானத்தை வளர்ப்போம்" என்ற உன்னதக் கருப்பொருளை முன்வைத்த ஆரோன் அகோ டகாங், இன்றைய இணைய உலகில் சொற்களின் தூய்மை எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நல்ல வார்த்தை இதயங்களை இணைக்கும், அதேவேளையில் ஒரு தவறான வதந்தி சமூக நல்லிணக்கத்தைக் கலைத்துவிடும் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும் பொறுமையுடனும், விவேகத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆன்மீக நெறிகள் நம் அன்றாட டிஜிட்டல் வாழ்விலும் ஒளிர வேண்டும் என்பதே அவரது அன்பான வேண்டுகோளாகும்.








