சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், மளிகைக் கடை ஒன்றில் நபர் ஒருவர், கடைக்காரரை ஆக்ரோஷமாக அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 20-ஆம் தேதி காலை 8:20 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவருகிறது. அந்த வீடியோவில், கடைக்கு வந்த நபர் ஒருவர் முதலில் அங்கிருந்த பெண் ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த கடைக்காரரை அந்த நபர் ஓங்கி அறைகிறார்.
தாக்குதல் நடத்திய அந்த நபர், கடையின் முகப்பிடத்தில் இருந்த பொருட்களைத் தள்ளிவிட்டு ஆக்ரோஷமாகச் செயல்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. கடையின் உள்ளே தொடங்கிய இந்த மோதல் வெளியேயும் நீடித்தது.
உடனே அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களும், பாதுகாப்பு அதிகாரியும் தலையிட்டு அந்த நபரைத் தடுத்து நிறுத்தினர். இந்தத் தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பொது இடத்தில் கடைக்காரர் தாக்கப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.








