பெர்லிஸ் மாநிலம் அராவ் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை முத்தமிட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து அராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் மொஹ்சின் ரோடி வெளியிட்டுள்ள தகவலில், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து இன்று பிற்பகல் 1 மணியளவில் போலீஸ் புகாரைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது, சந்தேக நபர் பள்ளியின் பின்பக்க வாயில் வழியாக வளாகத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலாட் பயிற்சி ஆசிரியர் கண்டுள்ளார்.
பின்னர், அந்த சந்தேக நபர், மாணவர்கள் சிலாட் பயிற்சி மேற்கொண்டிருந்த மைதானத்துக்குச் சென்று, அங்கு இருந்த சில ஆண் மாணவர்களை பிடித்து தூக்கி முத்தமிட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெர்லிஸ் போலீசார் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஆடவரைத் தேடி வருகின்றனர்.








