கோலசிலாங்கூர், நவ.8-
சில மணி நேரம் பெய்யக்கூடிய கன மழையில் வெள்ள இடர்களுக்கு உரிய மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப்பிரதேசத்தில் வெள்ளத்திற்கு தீர்வு காண்பதற்கு நிலத்தடி சுரங்க கால்வாய் முறைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கன மழையில் ஏற்படக்கூடிய வெள்ள நீரை ஈர்க்கக்கூடிய அமைப்பு முறையை கொண்ட இந்த நிலத்தடி சுரங்கத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு உத்தேசித்துள்ளது. கடுமையான மழையிலும் எந்த இடத்திலும் நீர் தேங்க முடியாத அளவிற்கான கட்டமைப்பைக்கொண்ட ஜப்பானில் அமல்படுத்தப்பட்ட திட்ட முறையை ஒத்து, இந்த பிரதான சுரங்க கட்டமைப்புத்திட்டம் அமைந்து இருக்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸாம் ஹஷிம் தெரிவித்தார்.
இந்த நிலத்தடி சுரங்கப்பாதைத்திட்டம் அமையுமானால் மலேசியாவில் வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காணக்கூடிய முதலாவது நிலத்தடி சுரங்கத்பாதைத் திட்டமாக இது விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காணக்கூடிய நீடித்த திட்டம் என்பதால் தற்போது இந்த திட்டத்தை வரையும் முயற்சியில் சிலாங்கூர் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








