பத்து காஜா,அக்டோபர் 05-
செம்பனைத் தோட்டம் ஒன்றில் செம்பனைக் குலைகளை திருடியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், வேட்டைத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். காலில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணியளவில் பேரா, செலமா, கம்போங் சம்பிட் பெராஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், யார் என்பது தெரியவில்லை. சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாகி விட்டார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ்தெரிவித்தார்.
ஓரிட மக்கள் சேகரித்து வைத்திருந்த செம்பனைக்குலைகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த ஆடவர், போதைப்பொருள் மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அந்த நபர் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட போது, அவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று டத்தோ அசிசி மேட் அரிஸ் விளக்கினார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.








