கோலாலம்பூர், செப்டம்பர்.23-
சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான அதிகாரத்துவ வாகனத்தில் பயணிக்கும் போது அதன் அதிகாரி ஒருவர் , வாகனத்தின் கண்ணாடியை இறக்கி, ஒரு கையில் சிகரெட்டைப் பிடித்தவாறு புகைத்துக் கொண்டுச் சென்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்குக் காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியின் செயலை சிலாங்கூர் மாநில அரசு கடுமையாகக் கருதுவதாக மாநில அரசாங்கச் செயலாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் மாநில அரசின் தோற்றத்தைக் காப்பதில் கடமைப்பற்றவர்கள் ஆவர். மாநில அரசுக்குச் சொந்தமான உடமைகளைப் பயன்படுத்தும் போது, அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகும். ஓர் அதிகாரியின் இத்தகைய கட்டொழுங்கு குறைபாடு, மாநில அரசின் தோற்றத்திற்கு இழுக்கு சேர்க்கும் என்று மாநில செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








