ஜொகூர், ஜூலை 15-
வங்கியின் பெண் அதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வங்கி பாதுகாவலர் ஒருவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.
ஓர் இந்தோனேசியரான லா ஓடே ஆர்டி ரசிலா என்ற 47 வயதுடைய அந்த பாதுகாவலருக்கு தூக்குத் தண்டனைக்கு பதிலாக 38 ஆண்டு சிறையும், 12 பிரம்படித் தண்டனையையும் கூட்டரசு நீதிமன்றம் விதித்தது.
இன்று ஜோகூர்பாருவில் கூடிய நாட்டின் தலைமை நீதிபதிதுன் தேங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள், அந்த வங்கி பாதுகாவலருக்கு எதிரான குற்றத்தை உறுதிப்படுத்தினர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி சுபாங் ஜெயா யுஎஸ்ஜே சென்ட்ரல், ஜாலான் சென்ட்ரா 2 - இல் உள்ள AmBank- கட்டடத்தில் 37 வயதுடைய வங்கி பெண் அதிகாரி நோராசிதா அபு தாலிப்- என்பவரை சுட்டுக்கொன்றப் பின்னர் வங்கியிலிருந்து 5 லட்சம் வெள்ளி ரொக்கத்தை கொள்ளையிட்டதாக லா ஓடே ஆர்டி ரசிலா குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த நபர், மலேசியப் பிரஜையின் போலி அடையாள கார்ட்டை பயன்படுத்தி, அந்த வங்கியில் பாதுகாவலராக வேலை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.








