7 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்கப்பட்டு மீட்கப்பட்ட 44 வயது நபர், உள்ளூர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடியாகத் தொடர்புடையவர் என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் கமிஷனர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
இன்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டத்தோ ஹுசேன், கடத்தப்பட்ட நபருக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் 2023-ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். இக்கும்பலுடன் தொடர்புடைய பிற நபர்களைக் கண்டறியும் நோக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.








