மிட் வேலி சிட்டியிலுள்ள சென்டர்பாயிண்ட் தெற்கு கோபுரக் கட்டிடத்தில் நேற்று வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, உடனடியாக அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
எனினும், அங்கு வெடிகுண்டோ சந்தேகத்திற்கிடமான பொருளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கூ சங் ஹூக் வெளியிட்டுள்ள தகவலில், சம்பவத்தின் போது கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டை அகற்றும் நிபுணர்களும், கே9 பிரிவும் சோதனை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட போலி மிரட்டலாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.








