பேராக் மாநிலம் பெர்லோப் போதைப்பொருள் அடிமைத்தனம் மீட்பு மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிய நான்கு கைதிகள் பந்தார் பாரு பாங்கி பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான ஏ.ஏ.டி.கே தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏ.ஏ.டி.கே தலைமை இயக்குநர் டத்தோ ரூஸ்லின் ஜூசோ கூறுகையில், கடந்த ஜூலை 24 -ஆம் தேதி தப்பிய அந்த நான்கு கைதிகளும், போலீசார் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் சுங்கை சிபுட் பகுதியில் ஏற்கனவே மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.








