மலாய்க்காரர்கள், சோம்பேறிகள் என்று கூறி, கம்போடியா நாட்டுப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் போலீசார் 14 புகார்களை பெற்று இருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைனோல் சமா தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களின் செயல்திறனை சிறுமைப்படுத்தும் வகையில் அந்த கம்போடியா நாட்டுப் பெண், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள அந்த காணொளி தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருப்பதுடன் அது குறித்து போலீஸ் புகார்களையும் செய்து இருப்பதாக டத்தோ சைனோல் சமா குறிப்பிட்டார்.
தையல் கடை வைத்திருப்பதாக நம்பப்படும் அந்த கம்போடியா பெண், துணிக்கடை ஒன்றின் முன் நின்றுகொண்டு பேசும் காட்சியை கொண்ட 7 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி, மிக உணர்ச்சிகரமான விவகாரத்தை உள்ளடக்கியிருப்பதால் அது குறித்து குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலாய்க்கார சோம்பேறிகளுடன் ஒப்பிடுகையில் கம்போடியா மக்கள் மிகக்கெட்டிக்காரர்கள் என்றும், மிக சுறுசுறுப்பானவர்கள் என்றும் அந்தப் பெண் சர்ச்சைக்கு இடமான வார்த்தைகளை அந்த காணொளியில் பிரயோகித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த காணொளியை பொது மக்கள் பகிர வேண்டாம் என்று டத்தோ சைனோல் சமா அறிவுறுத்தியுள்ளார்.








