செபராங் ஜெயா மருந்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இரு பெண் பராமரிப்பாளர்களும், KAP எனப்படும் குழந்தை பராமரிப்பு பணிக்குத் தேவையான கட்டாயப் பயிற்சியை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
என்றாலும், அந்த மையமானது சட்டபூர்வமாக இயங்கி வந்ததுடன், பதிவு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சமூக வளர்ச்சி, நலன் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்கள் குழுத் தலைவர் லிம் சியூ கிம் தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அம்மையத்தில் பணியாற்றும் ஏழு பராமரிப்பாளர்கள் தற்போது KAP பயிற்சியை முடிக்கும் செயல்முறையில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த மையத்தில் நான்கு வயதுக்குக் கீழ் 44 குழந்தைகள் இருப்பதாகவும், அக்குழந்தைகள் அனைவரும் மருத்துவமனை பணியாளர்களின் குழந்தைகள் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.








