மலாக்கா மாநிலம், சுங்கை ஊடாங் பகுதியில் 25 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், இன்று முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளார்.
நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், உயிரிழந்த இளைஞரின் வீட்டின் முன்பு, 44 வயதுடைய சந்தேக நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேக நபர் அந்த இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர், தனது கைப்பேசியை அந்த இளைஞரிடம் கொடுத்திருந்ததாகவும், பலமுறை கேட்டும், அந்த இளைஞர் அதனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த கைப்பேசியை போதைப்பொருள் வாங்குவதற்காக அந்த இளைஞர் விற்றுவிட்டதாக சந்தேக நபர் நம்பியதையடுத்து, ஆத்திரமடைந்த அவர் இத்தாக்குதலை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








