கோலாலம்பூர், நவம்பர்.11-
கடந்த அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களை நடத்தியதற்கான மொத்த செலவு 184.4 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள் இந்த செலவுகள் இருப்பதாகவும், தற்போதைய நடைமுறைகள் மற்றும் நிதி சேமிப்புத் திட்டங்களின் அடிப்படையில் செலவுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மலேசியா தலைமையேற்று நடத்திய இந்த உச்சநிலை மாநாட்டிற்கான ஏற்பாடுகள், இந்த ஆண்டு தொடக்கம் முதல் முறையாக திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பிற்கு இணங்க வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட இம்மாநாடு, சிறப்பாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதற்குத் தேவையான அத்தனை அம்சங்களுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








