மாரான், டிச.10-
பகாங் மாநிலத்தில் கடந்த மூன்று தினங்களாக அடை மழை பெய்து வரும் வேளையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறி வரும் நிலையில் மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய வளாகத்தில் இடுப்பு வரையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பின்புறம் உள்ள சுங்கை ஜெரிக் ஆற்றில் நீர் இரு மருங்குகளிலும் கரைப்புரண்டோடுவதால், நேற்று இரவு 11 மணி முதல் ஆலயத்தின் சுற்றியுற்ற வளாகத்தில் வெள்ளம் ஏற்படத் தொடங்கியதாக ஆலயத்தின் தலைவர் பி. இராமன் தெரிவித்தார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, ஆலயத்தின் சுற்றியுள்ள சுவரை கடந்து ஆலயத்தின் உள் வளாகத்திலும் வெள்ளம் சூழ்ந்துகொண்டு, நீரின் மட்டம் உயரத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை புரிவது பாதுகாப்பான சூழல் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
நடப்பு வானிலையைப் பொறுத்து, வெள்ளம் வடிய ஓரிரு தினங்கள் ஆகலாம். அதன் பின்னர் ஆலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு ஆலயத்திற்கு வருகை புரிய திட்டமிட்டவர்கள், தங்கள் வருகையை ஒத்திவைக்குமாறு இராமன் ஆலோசனைக் கூறினார்.
அதேவேளையில் தங்கள் வருகைக்கு முன்னதாக ஆலயத் தரப்பினருடன் தொடர்ப்புகொண்டு வெள்ள நிலைமையை அறிந்துகொள்ளுமாறும் பக்தர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.








