முன்னாள் பொருளாதார அமைச்சர் ஒருவருக்குத் தொடர்புடைய 5 லட்சம் ரிங்கிட் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனை குறித்த புகாரை மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையமான SPRM உறுதிப்படுத்தியுள்ளது. விற்பனை இயந்திரமான வெண்டிங் மெஷின் தொடர்பான ஒரு திட்டத்தில், இந்தத் தொகை இடைத்தரகர் மூலமாக அரசியல் நிதியாகவோ அல்லது பிரச்சாரம் செய்வதற்காகவோ வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்கள் சமூக ஊடகப் போராட்டச் செயலகம் இன்று மதியம் SPRM தலைமையகத்தில் இது தொடர்பான 20 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை மற்றும் முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்தது. இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஷாபுடின் எம்புன் , ஆன்லைன் போர்டல் ஒன்றில் வெளியான இந்தத் தகவல் குறித்த உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முறையான விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்தத் தகவலைப் பொய்ச்செய்தி என மறுத்திருந்தார். தற்போது அதிகாரப்பூர்வப் புகார் கிடைத்துள்ளதால், ஆவணங்களை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக SPRM-இன் வியூக தொடர்புப் பிரிவு இயக்குநர் ஹிஷாம் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.








