கோலாலம்பூர், டிசம்பர்.14-
இன்று காலை கோலாலம்பூர், ஜாலான் இஸ்தானாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத மியான்மார் நாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெஸ்ராயா நெடுஞ்சாலையில் இருந்து நகர்ப்புற மையத்தை நோக்கி வந்த 44 வயதுடைய அந்த நபர், வலது புறம் பாதையை மாற்ற முயன்ற போது, அதே பாதையில் நேராகச் சென்ற மலேசிய ஆடவர் ஓட்டி வந்த கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
தலையிலும் உடலிலும் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கப் பிரிவுத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார். உயிரிழந்தவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் காவற்படை தெரிவித்துள்ளது.








