


நெகிரி செம்பிலான், ரெபாஹ் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் எஸ். வீரப்பன், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சித்திட்டங்களில் தன்னைப்பிணைத்துக்கொண்டு, அதிக உதவிகளை வழங்கிய ஓர் அரசியல் பண்பாளர் ஆவார் என்று தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள் வர்ணித்துள்ளனர்.
குறிப்பாக கெமஞ்சே, ஆயர் கூனிங்கில் உள்ள புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சித்திட்டங்களுக்கு வீரப்பனின் அளப்பரிய பங்களிப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளது என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயபாலன் கூறுகிறார்.
பள்ளியின் போட்டி விளையாட்டு ,சாரணர் இயக்கம்,பரிசளிப்பு விழா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் உட்பட பள்ளி தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு தவறாமல் துணை நின்று மானியங்களை வழங்குவது வீரப்பனின் வழக்கமாகும் என்று ஜெயபாலன் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்திற்கு முதல் முறையாக வீரப்பன் வருகை தந்தது முதல் அவரின் தலைமையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக ஜெயபாலன் விவரித்தார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளியின் தொழில் புரட்சி 4.0 திட்டத்தில் "துளிர்" கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு 17 டேப்லட் சாதனங்கள் தேவைப்பட்டன. இந்த தொழில் புரட்சித் திட்டத்தில் ஏறக்குறைய 5,800 வெள்ளி செலவிடப்பட்டது. இதில் முழுக்க முழுக்க உதவியது ரெப்பா தொகுதியில் போட்டியிடும் வீரப்பன்தான் என்று புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலன் நன்றிபெருக்குடன் நினைவுகூர்ந்தார்.








