குவாந்தான், ஆகஸ்ட்.02-
கிழக்குக்கரை நெடுஞ்சாலையான எல்பிடியின் 200.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தொன்றில் மூன்று வங்காளதேசிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் நண்பர்களான மேலும் இருவர் காயமுற்றனர்.
இந்த விபத்து நேற்று இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த டொயோட்டா அவான்ஸா ரக வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி தடம் புரண்டதில் மூவரும் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
அந்த வாகனத்தில் மொத்தம் ஐவர் பயணம் செய்துள்ளனர். கடும் காயங்களுக்கு ஆளான இதர இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஐவரும் குவாந்தானிலிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








