மலாக்கா, ஜூலை 4-
TM என்று அழைக்கப்படும் Telekom Malaysia நிறுவனத்திற்கு சொந்தமான செப்பு உலோக கம்பிகளை கொண்ட கேபல்களை, திருட்டுத்தனமாக வாங்கி, அவற்றை உருக்கியதாக இரும்புக்கடை முதலாளி ஒருவர் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.
38 வயது MB. விக்னேஸ்வரி என்ற அந்த இரும்புக்கடை பெண் இயக்குநர், மாஜிஸ்திரேட் நபீலா நிசீம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
தன்னிடம் விற்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள டெலிகாம் மலேசியா நிறுவனத்திற்கு சொந்தமான செப்பு உலோக கம்பி கேபள்கள், திருடப்பட்ட பொருட்கள் என்று நன்கு தெரிந்தும், அவற்றை குறைந்த விலையில் வாங்கி, உருக்கியதாக விக்னேஸ்வரி குற்றஞ்சாட்டப்பட்டார்.
விக்னேஸ்வரி, கடந்த மே 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மலாக்கா தெங்காவில் தனது இரும்புக்கடையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 414 பிரிவின் கீழ் விக்னேஸ்வரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விக்னேஸ்வரி விசாரணை கோரியிருப்பதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.








