அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்தால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் மிகப் பெரிய அழிவை நோக்கித் தள்ளக்கூடும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி, அரசதந்திரப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தாக்குதல்கள் இரு தரப்பையும் கடந்து, பிராந்தியத்தின் பிற நாடுகளையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அன்வார், மோதலைத் தடுக்க அதிக ஆற்றல் கொண்ட தரப்பினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய பொறுப்பு அதிகம் என்றார்.
மேலும், பிற நாடுகளின் இறையாண்மையைப் புறக்கணிக்க முடியாது என்றும், பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் எந்த ராணுவ இலக்கும் நியாயப்படுத்தப்பட முடியாது என்றும் அவர் கூறினார்.
பரந்த பிராந்தியப் போரைத் தவிர்க்க, பிரச்சினைக்கு இறுதித் தீர்வு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலேயே காணப்பட வேண்டும் என அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








