ஜோகூர், கோத்தா திங்கி, செனாய்-தேசாரு விரைவுச்சாலையில் உள்ள சுங்கை ஜோகூர் பாலத்தின் மீது சரக்குக் கப்பல் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியக் கொடியுடன் பயணித்த எண்ணெய் தயாரிப்புகளை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், இன்று பிற்பகல் 2.35 மணியளவில், பெனாவார்-பாசிர் கூடாங் பகுதிக்கு இடையிலான 48.9- ஆவது கிலோ மீட்டர், மேற்குத் திசை வழித்தடத்தில் பயணித்தபோது பாலத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
இதனிடையே, கப்பல் மோதிய போதிலும் பாலத்தின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதாகவும், பெரிய அளவில் சேதம் அல்லது குறைபாடு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலுக்குப் பின்னர் அந்தக் கப்பல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் செனாய்-தேசாரு விரைவுச்சாலை நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது








