அம்பாங்கில் பெட்ரோல் பெடலை தவறுதலாக அழுத்தியதால், அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கார் கீழ்தளத்திற்கு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.
42 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் வாகனத்தை நிறுத்துமிடத்திலிருந்து வெளியே எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் கீழ்தளத்திற்கு பாய்ந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








