இணையக் குற்றங்களும் மோசடிகளும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம், அமலாக்க அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் இணைந்து செயல்படுவது அவசியம் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
பாங்கி ரிசோர்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற அனைத்துலக சைபர் மீள்திறன் மாநாடு 2026-ஐ தொடக்கி வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு மட்டும் நாட்டில் 66,204 இணைய மோசடி சம்பவங்கள் பதிவாகி, ரிங்கிட் 2.97 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 29,434 சம்பவங்களில் ரிங்கிட் 827.73 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ சைபுடின் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட ரிங்கிட் 7.25 மில்லியனில், ரிங்கிட் 3.57 மில்லியன், அதாவது 49 விழுக்காடு தொகை, மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு, குறிப்பாக டீப்ஃபேக், இணையக் குற்றங்களை கண்டறிவதிலும் டிஜிட்டல் தடயவியல் விசாரணையிலும் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக டத்தோஸ்ரீ சைபுடின் தெரிவித்தார்.









