சரவாக்கில் நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறைப் பணிகளின் ஒரு பகுதியாக, 254 புதிய வாக்குச்சாவடி மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய ஆணையர் ஃபைசால் ஷாம் அப்துல் ஹாஸிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடி மாவட்டங்களின் எண்ணிக்கை 887-இலிருந்து 1,141 ஆக அதிகரிக்கிறது.
சரவாக்கில் தற்போது 82 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு 17 புதிய தொகுதிகளை உருவாக்கி, மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 99 ஆக உயர்த்த மாநில சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் எண்ணிக்கையைப் பரவலாக்குவதே இந்த மறுவரையறையின் முக்கிய நோக்கம் என ஃபைசால் ஷாம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மிரியின் செனாடின் தொகுதியில் 74 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில், இது மாநில சராசரியைவிட சுமார் 200 விழுக்காடு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை ஒரே ஒரு மனு மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த மனுவும் முழுமையற்றதாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மறுவரையறை முன்மொழிவு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன.








