கடந்த ஜூலை 20-ஆம் தேதி, கிள்ளான், புக்கிட் திங்கி பகுதியில் வங்கி ஒன்றின் முன்பு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் நேற்று காலை ஷா ஆலாம் பகுதியில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பணம் ஏற்றிச் சென்ற பாதுகாப்பு வாகனத்தை கொள்ளையடிக்க முயன்றதுடன், பாதுகாப்பு காவலரிடமிருந்த ஷாட்கன் துப்பாக்கியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து, நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஷாட்கன் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், சந்தேகநபருக்கு ஆயுதச் சட்டம் 1960, பிரிவு 8-ன் கீழ் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த முந்தைய குற்றப்பதிவு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்தன்று 43 வயதான பாதுகாப்பு வாகன ஓட்டுநர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.








