கோத்தா திங்கி, மார்ச்.01-
கோத்தா திங்கி, ஃபெல்டா புக்கிட் பெசார் பகுதியில் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் கைபிரேக்கை இழுக்க மறந்ததால், அதன் ஓட்டுநரான 37 வயது முஹமட் ரிஸ்வான் ஒஸ்மான் உயிரிழந்தார். நோன்பு துறந்த பிறகு லாரி தானாக முன்னோக்கி நகரத் தொடங்கியதைக் கண்ட அவர், அதைக் கையால் தடுத்து நிறுத்த முயன்ற போது லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கினார். சுமார் 7.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் யுசோஃப் ஒத்மான் உறுதிப்படுத்தினார். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்துச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.








