கோலாலம்பூர், மே.24-
சுகாதார அமைச்சின் PeKa B40 திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்தவர்களில் சுமார் பாதியினர், முதுமை அடைவதற்கு முன்பே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்ற ஏதேனும் ஒரு தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ProtectHealth நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, பரிசோதிக்கப்பட்டவர்களில் 46 விழுக்காட்டினருக்குப் புதிய நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி வான் முஹமட் ஹஸ்வான் வான் முஹமட் நஜீப் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நோய்கள் இளம் வயதினரையும் பாதிப்பது நாட்டின் தொழிலாளர் உற்பத்தித் திறன், பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை அச்சுறுத்துவதாக அவர் எச்சரித்துள்ளார். தகுதியுள்ள 7.1 மில்லியன் மக்களில் சுமார் 27 விழுக்காட்டினர் மட்டுமே இலவசப் பரிசோதனை வசதியைப் பயன்படுத்திக் கொள்வது கவலையளிப்பதாகவும், பொதுமக்கள் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








