ஜோகூரில் தேசியக் கொடியும், மாநிலக் கொடியும் தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் வைரலானதைத் தொடர்ந்து, பள்ளிகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தனியார் வளாகங்கள் கொடிகளை முறையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என ஜோகூர் மாநில அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய மாத கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் கொடிகளை ஏற்றுமாறு வலியுறுத்திய ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் முஹம்மட் நகீப் முகமது கஸ்ஸாலி, அவற்றை உரிய நடைமுறைகளின்படி மரியாதையுடன் காட்சிப்படுத்துவதும் அனைவரின் பொறுப்பு என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜோகூரில் தலைகீழாக கொடிகள் பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடியை தலைகீழாகப் பறக்கவிட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும், கூலாய் மற்றும் இஸ்கந்தர் புத்ரியில் உள்ள தெற்கு தொழில்துறை மற்றும் தளவாடக் குழுமத்தில் இரு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.








