கிள்ளான் மாநகராட்சி கழக தன்னார்வலர் ஒருவர், கடந்த மாதம் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது ‘ராக்கி’ என்ற வளர்ப்பு நாயை கயிற்றால் கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாக கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும், ஷாஹ் இதாம் நூர் ஹைக்கால் ஷாஹரோம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி போர்ட் கிள்ளானில் உள்ள தாமான் தெலுக் கெடுங் இண்டா பகுதியில், நாயை கயிற்றால் நெரித்து தேவையற்ற வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
விலங்குகள் நலச் சட்டப்பிரிவு 29(1)(e)-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி முஜீப் சரோஜி , ஒருவரின் உத்தரவாதத்துடன், ஷாஹ் இதாம்-க்கு 6 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கியதுடன், வழக்கு முடிவடையும் வரை மாதந்தோறும் கால்நடை சேவைகள் துறையில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஷாஹ் இதாம்-இன் வழக்கறிஞர் முகமட் ரஃபீக் ரஷீத் அலி, பிணைத் தொகை மிக அதிகமாக இருக்கக்கூடாது என்று தாங்கள் வாதிட்டதாகவும், அவரது கடப்பிதழை பறிமுதல் செய்வது மிகவும் நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு மேலாண்மையானது அக்டோபர் 8-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையில், கடந்த ஜூலை 29-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது ராக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நாயின் உரிமையாளர் அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக கிள்ளான் மாநகராட்சி கழகம் தெரிவித்துள்ளதுடன், நாயை விடுவிக்காவிட்டால் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதாக அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.








