கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்துலக நுழைவாயில்களின் பாதுகாப்பை வலுப்படுத்த 17 பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் கூட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமல்படுத்தப்படவுள்ள ஆறு முக்கிய நடவடிக்கைகளில், அதிக ஆபத்து கொண்ட விமானங்கள், பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணப் பொதிகளுக்கு ஆபத்து அடிப்படையிலான தீவிர சோதனை நடத்தப்படுவதும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானிகள், விமானப் பணியாளர்களுக்கு வேலைக்கு முன், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மற்றும் திடீர் போதைப்பொருள் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
விமான நிலையத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளுக்குள் நுழையும் விமான ஊழியர்கள், விமான நிறுவனப் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோருக்கான மின்னணு பாதுகாப்பு சோதனை மற்றும் அனுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை முன்னோடி மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த 17 அம்சத் திட்டம், பின்னர் அச்சுறுத்தல் நிலைக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள அனைத்துலக நுழைவாயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, பயணிகளின் உரிமைகள், தரவு பாதுகாப்பு மற்றும் விமானத் துறையின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.








