பிரபல நவநாகரிக ஆடை விற்பனை நிறுவனமான பதினி ஹோல்டிங்ஸ் தொடர்பான விசாரணையில், உதவுவதற்காக எட்டு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாகி தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15 பேரைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1MDB வழக்குடன் தொடர்புடைய மீட்கப்பட்ட நான்கு கலைப்பொருட்களை வெளியிட்ட பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் இறுதியில், பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக பதினி மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான பல வங்கி கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியது.
இந்த கணக்குகள் முடக்கப்பட்டதற்கு, நிறுவனத்துக்கு வெளியேயுள்ள சில மூன்றாம் தரப்பினரைச் சேர்ந்த விசாரணைகளே காரணம் என பதினி தெரிவித்திருந்தது.
பதினியில் வழக்கம் போல், வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீட்டெடுக்க வழக்கறிஞர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள், நிறுவனத்தின் ஊழியர்களோ, அதிகாரிகளோ அல்லது நிர்வாகக் குழு உறுப்பினர்களோ அல்ல என்று பதினி ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக எஸ்பிஆர்எம்க்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பதினி அறிவித்துள்ளது.








