பெண் ஒருவர், ஆழமான கத்திக் குத்துக் காயங்களுடன் காருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து கிள்ளான், தாமான் சி லியுங்,ஜாலான் பாயு திங்கி 5 இல் 26 வயதுடைய அந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக கிள்ளான் செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹோங் ஃபோங் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணை கத்தியால் குத்தியதாக நம்பப்படும் 44 வயது ஆடவரும், அதே கத்தியைப் பயன்படுத்தி தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டதாக சா ஹோங் ஃபோங் குறிப்பிட்டார்.
முன்னதாக, அந்த பெண்ணும், ஆணும் அருகில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் உணவகத்தைவிட்டு வெளியேறியப் பின்னரே அந்த நபர், சம்பந்தப்பட்ட பெண்ணை கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது என்று சா ஹோங் ஃபோங் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.








