தேசிய தணிக்கைத் துறை வெளியிட்ட அறிக்கை விவகாரத்தில் அரசாங்கம் பாரபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய தணிக்கைத் துறையின் கண்டுபிடிப்புகள் தற்போதைய அரசாங்கத்தின் நிலைக்குச் சாதகமாக இருக்கும்போது மட்டுமே அதை நம்ப வேண்டுமா என்று அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாரிசான் நேசனல் முன்னாள் தொடர்பு துறை இயக்குநர் டத்தோ எரிக் சீ-டோவின் பதிவைப் பகிர்ந்துள்ள நஜிப், தாபுங் ஹாஜி நிதிநிலை அறிக்கைகளுக்குத் தேசிய தணிக்கைத் துறை தூய்மையான சான்றிதழ் வழங்கியிருந்ததையும், பின்னர் அரசாங்கம் மாறியதும் தனியார் தணிக்கை நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பற்றாக்குறையாகக் காட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் உயரிய தணிக்கை நிறுவனத்தைக் காட்டிலும் தனியார் நிறுவனம் துல்லியமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், தாபுங் ஹாஜி கணக்குகளில் சொத்துகளின் உண்மையான மதிப்பை வெளிப்படுத்தாதது உள்ளிட்ட கணக்கியல் சிக்கல்கள் இருந்ததாக அரச விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளது. உரிய தரநிலைகள் பின்பற்றப்பட்டிருந்தால், 2017-ஆம் நிதியாண்டில் 3.4 பில்லியன் ரிங்கிட் லாபத்திற்குப் பதிலாக 1.4 பில்லியன் ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.








