வளர்ப்பு நாயை மனிதநேயமற்ற முறையில் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் போர்ட் கிள்ளான், தாமன் தெலுக் கெடுங் இந்தா பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது கும்பலாகச் சேர்ந்து செயல்பட்டவர்கள், நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி கடுமையாக இறுக்கியதுடன், விடாமல் இரும்புத் கம்பியால் தலையிலும் தாக்கி அதனை கொன்றுள்ளனர். உரிமம் பெறாத நாய் என்றாலும் அதனை இந்த முறையில் கொடூரமாகக் கொல்வது பெரும் தவறு என்று மலேசிய விலங்கு நலஅமைப்பின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தின்போது கிள்ளான் மாநகர் மன்றத்தின் அதிகாரிகள் இருவர் அங்கு இருந்ததாக கூறப்படுவதால், இது மாநகர் மன்றத்தின் ஒப்புதலோடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாய்க்கு உரிமம் இல்லாததால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினரின் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அந்த நாய்க்குச் சிறந்த நீதி கிடைக்கக் கோரி பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கிள்ளான் செலாத்தான், போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.








