ஈப்போ சுங்கை பாரியில் கைவிடப்பட்ட 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பில், 14 வயது சிறுமிகளான கீர்த்திஷாவும் ராஜேனாவும் கடந்த ஜூலை 24 அன்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பேராக் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
அந்த பழமையான குடியிருப்பு அடுக்குமாடி வீட்டு கட்டடத்தில் எங்கள் பிள்ளைகளின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும்!" என்று கண்ணீர் மல்கக் கூறிய பெற்றோர்கள், இந்த விபரீதத்திற்கு அதிகாரிகளின் பாதுகாப்பு அலட்சியமே காரணம் என புந்தோங் போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக எவ்வித வேலியோ, கண்காணிப்போ இன்றி ஆபத்தான நிலையில் இருக்கும் இக்கட்டிட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இனியும் அந்த பழமையான கட்டடத்தில் எந்த உயிரும் போகக்கூடாது. ஒன்று, அந்த கட்டடத்திற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பு வேலை அமைக்கப்பட வேண்டும் அல்லது இடித்துத் தள்ளப்பட வேண்டும் என்று உயிரிழந்த ராஜேனாவின் தந்தை சசிந்திரன் ஆனந்தன் தெரிவித்தார்.
ஈப்போ மாநகரம் உரிய நடவடிக்கை எடுத்து தவறியதே இரு பிள்ளைகள் கீழே விழுந்து மரணம் அடைந்ததற்கு காரணமாகும் என்று உயிரிழந்த கீர்த்திஷாவின் தந்தை தயாளராஜ் தங்கையா வேதனை தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்த முன்னாள் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்ரமணியம், "கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் உள்ளூர் நிர்வாகமும் மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? உயிர் போன பிறகு நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையல்ல," என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இடிப்பு பணிகள் முடியும் வரை தற்காலிக வேலி அமைத்து, பகல்-இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இச்சோகம் குறித்து உண்மை நிலவரத்தை வெளிக்கொணர போலீஸ் துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதி. சிவசுப்ரமணியம் வலியுறுத்தினார்.








