மருத்துவக் காப்புறுதி பாலிசியின் பிரமியக் கட்டணத் தொகை அடுத்த ஆண்டில் 70 விழுக்காடு வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வினால் சில பாலிசிதாரர்கள், தங்களின் மாதாந்திர பிரமியக் கட்டணத் தொகையை செலுத்த இயலாமல், பாலிசியை தொடர்வதை நிறுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சுகாதார மருத்துவப் பராமரிப்பிற்கான சிகிச்சைக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மருத்துவக் காப்புறுதி பாலிசிக்கான பிரமியத் தொகை உயர்த்தப்படுவதாக முன்னணி காப்புறுதி நிறுவனங்கள், தங்களின் பாலிசிதாரர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக முன்னணி மலாய் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் எடுத்துள்ள மருத்துவக் காப்புறுதி பாலிசிக்கான புதிய பிரமியத் தொகை அடுத்த பிப்ரவரி முதல் அமலுக்கு வருகிறது என்று முன்னணி காப்புறுதி நிறுவனம் தனக்கு நோட்டிஸ் அனுப்பிவைத்துள்ளதாக தன்னை ஹமிடி என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட பாலிசிதாரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்பு, மாதாந்திரக் கட்டணமாக மாதத்திற்கு 157 ரிங்கிட் 47 காசு, பிரமியத் தொகையாக தாம் செலுத்தி வந்ததாக ஹமிடி கூறுகிறார். கடந்த ஆண்டு இந்த தொகை 188 ரிங்கிட் 47 காசாக உயர்த்தப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட புதிய பிரமியத் தொகையின்படி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து 237 ரிங்கிட் 34 காசை செலுத்தும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இது உண்மையிலேயே தமக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். மற்றொரு பாலிசிதாரரான Safie Wahap கூறுகையில் தம்முடைய மாதாந்திர பிரமியத் கொகை 244 ரிங்கிட்டிலிருந்து 377 ரிங்கிட்டிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.
ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 133 ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பாலிசியை தொடராமல் நிறுத்திக்கொள்ள சாத்தியம் இருப்பதாக அந்த பாலிசிதாரர் கூறுகிறார்.








