பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளி மாணவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 வயது சிறுவனுக்கு எதிரான விசாரணையில், இன்று இரு சிறார் சாட்சிகள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை நேரில் பார்க்க முடியாத வகையில் மறைப்புத் திரையின் பின்னால் இருந்து அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
சிறார் சாட்சிகளின் அடையாளமும் சாட்சிய விவரங்களும் கடந்த 2007-ஆம் ஆண்டு சிறார் சாட்சியச் சட்டத்தின் கீழ் ரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் உத்தாமா டமன்சாரா 4 பள்ளியின் மாணவிகள் கழிப்பறையில் தனது 16 வயது வகுப்புத் தோழரை கொலை செய்ததாக 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதுவரை உயிரிழந்த மாணவரின் தாய், தடயவியல் நிபுணர், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏழு அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








