சிலாங்கூர் அரசு அறிவித்துள்ள 'நியூட்ரிசெல்' (NUTRISEL) இலவசக் காலை உணவுத் திட்டத்தை, குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்காமல், வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மூடா (MUDA) கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சிவபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் இலவச உணவு வழங்குவது, வகுப்பறையில் பொருளாதாரப் பாகுபாட்டையும், குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்கும் என்பதால், பள்ளிகளில் சமத்துவத்தை உறுதி செய்ய இத்திட்டம் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்கான தகுதி வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத வருமானம் 2,000 ரிங்கிட் என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியாவின் தற்போதைய வறுமைக் கோட்டு வருமானம் 2,705 ரிங்கிட் ஆக இருக்கும் வேளையில், சிலாங்கூரின் உயர்ந்த வாழ்க்கைச் செலவினங்களால் வறுமைக் கோட்டுக்கு சற்று மேல் உள்ள குடும்பங்களும் தங்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்க முடியாமல் தவித்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், சிலாங்கூர் அரசு முன்னுதாரணமாகத் திகழ்ந்து அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டத்தை முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








