பினாங்கு,டிச.6-
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான எட்டு லட்சம் வெள்ளி செலவிலான தங்க ரதம் விவகாரம் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்க ரத கொள்முதலில் ஊழல் புரிந்துள்ளதாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். ராமச்சந்திரனின் தடுப்புக்காவல் நாட்களை குறைப்பதற்கு அவரின் வழக்கறிஞர் செய்து கொண்டுள்ள விண்ணப்பம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
அதாவது, இராமச்சந்திரனை தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட 6 நாள் தடுப்புக்காவலில் ஐந்தாவது நாள்தான், பினாங்கு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஆர். ரோஷுன் ராஜ் தெரிவித்தார்.
டிசம்பர் 9 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு இந்த தடுப்புக்காவல் மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ராமச்சந்திரனின் தடுப்புக்காவலை 6 நாட்களிலிருந்து குறைப்பதற்குதான் நாங்கள், மாஜிஸ்திரேட் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனுவை சார்வு செய்தோம். ஆனால், 6 நாள் தடுப்புக்காவலில் 5 ஆவது நாள்தான் விசாரணை நடத்த முடியும் என்று உயர் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.
இம்முடிவு தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று வழக்கறிஞர் ரோஷுன் ராஜ் தெரிவித்துள்ளார்.
காரணம், டத்தோ இராமச்சந்திரனின் உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் தாங்கள் இந்த விண்ணப்பதை சார்வு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.








